காங்.கிற்கு ஓட்டு போடாததால் பழிவாங்குகிறதா கர்நாடக அரசு?, பெங்களூரில் இன்றுமுதல் 3 மணிநேரம் பவர்-கட்
பெங்களூர்: நாட்டின் ஐடி துறை தலைநகரான பெங்களூரில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அது 3 மணி நேரமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு காங்கிரஸ் அரசு தரும் பரிசு இந்த மின்வெட்டு என்று புலம்புகின்றனர் மக்கள்.
கர்நாடக அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பெங்களூரில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயச்சந்திரா போனவாரம்தான் அறிவித்திருந்தார். அவர் சொல்லி வாய்மூடுவதற்குள் மின்வெட்டும் அமலுக்கு வந்தது. காலையிலும், இரவிலும் தலா 1 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, வெள்ளிக்கிழமையான இன்று முதல் பெங்களூரில் மின்வெட்டு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாக பெங்களூர் மின்சார சப்ளை நிறுவனம் (Bescom) அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள், 3 முறை தலா 1 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்கப்போகிறதாம், பெஸ்காம்.
பிற நகரங்களில் மின்வெட்டு நேரம் 4 மணிநேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் 10 மணிநேரம் வரை கரண்ட்-கட் செய்யப்படுகிறது.
பொதுவாக எந்த ஒரு மாநில அரசும் பெங்களூரில் 2 மணி நேரத்திற்கு மேல் பவர்-கட் செய்தது கிடையாது. ஆனால், இம்முறை அது 3 மணி நேரமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவையே தேர்ந்தெடுத்தனர். இந்த கோபத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இப்படி தீர்த்துக்கொள்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.