பங்களாதேஷ் கடல் பகுதி எண்ணெய் கசிவால் இந்திய பகுதிக்கு ஆபத்தில்லை – அரசு அறிவிப்பு
கொல்கத்தா: வங்காள தேசத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வர்த்தக கப்பல் ஒன்றும் மற்றொரு கப்பல் ஒன்றும் வங்காளதேசத்தின் சுந்தரவன காடுகள் அமைந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் சென்றபோது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் அளவிலான எண்ணெய் கசிந்து நீரில் கலந்து விட்டது.
இது குறித்து சுந்தரவன காடுகளின் புலிகள் பாதுகாப்பு கள இயக்குநர் சவுமித்ரா தாஸ்குப்தா கூறுகையில், "எங்களது ஊழியர்கள் வங்காளதேசத்தை ஒட்டிய எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்திய பகுதியில் எவ்வித பாதிப்பும் தென்படவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் மேக்னா ஆறுகளால் உருவான சுந்தரவன காடுகள் உலகில் மிக பெரியவை ஆகும். இவை இந்தியா மற்றும் வங்காளதேசம் முழுவதும் பரவி உள்ளன.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதி என அறிவிக்கப்பட்டு உள்ள இந்த காடுகள் 100க்கும் அதிகமான தீவுகளுடன், புகழ் பெற்ற மாங்குரோவ் காடுகளையும் கொண்டுள்ளன.
அழிந்து வரும் நிலையில் உள்ள வங்க புலி, கங்கை மற்றும் ஐராவதி டால்பின்கள் உட்பட்ட பல்வேறு உயிரினங்களும் இங்குள்ள காடுகளில் வசித்து வருகின்றன. இந்திய பகுதியை சேர்ந்த வனவாழ் உயிரினங்கள் எண்ணெய் கசிவால் பாதிப்பின்றி பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குழு மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பகுதியில் எவ்வளவு தொலைவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது 200 கிலோ மீட்டருக்கு குறையாமல் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.