புர்த்வான் குண்டுவெடிப்பு... பணப் புழக்கம்- இந்தியாவுக்கு முக்கியத் தகவல் கொடுத்த வங்கதேசம்!
டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வங்கதேச விசாரணையாளர்கள், இந்திய விசாரணை அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களையும் கொடுத்து உதவி வருகின்றனர்.
சாரதா சிட் பண்ட் நிதி மோசடியில் கிடைத்த பணத்தை எப்படியெல்லாம் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தினர் என்ற விவரங்களையும் வங்கதேச விசாரணையாளர்கள் நமக்குக் கொடுத்து உதவி வருகிறார்களாம்.
நிதி ஆதாரம்:
இந்தியாவிலிருந்து திரட்டப்பட்ட பல கோடி இந்திய ரூபாய்களை வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய வங்கிக்கு மாற்றியுள்ளனர் தீவிரவாதிகள். இந்தப் பணத்தைக் கொண்டுதான் ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேச தீவிரவாத அமைப்பின் தேவைகளுக்கு அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் மேற்கு வங்கத்திலிருந்துதான் அதிக அளவில் பணம் வந்துள்ளது. இந்தப் பணத்தை பல வங்கிகளில் பதுக்கி வைத்து பின்னர் 18 தவணையாக, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள வங்கதேச தீவிரவாத அமைப்பின் கிளைகளுக்குப் பிரித்து அனுப்பி வந்துள்ளனர்.
இந்தப் பணம் பெரும்பாலும் சாரதா சிட்பண்ட் மோசடிப் பணமாகும். கடந்த 2011ம் ஆண்டின் பிற்பகுதியில்தான் இந்தப் பணம் வங்கதேசத்துக்குப் போக ஆரம்பித்துள்ளது. குறைந்தது ரூ. 650 கோடியை இவ்வாறு வங்கதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வலுவான ஆதரவுடன் கூடிய ஜமாத் இ இஸ்லாமி அமைப்புதான் இந்த வேலையசை் செய்துள்ளது.
வங்கதேசத்துக்குப் போன பணத்திலிருந்து ரூ. 18 கோடி வரை மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமுக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று வங்கதேச விசாரணையாளர்கள் கூறுகிறார்கள். முதலில் அஸ்ஸாமுக்கு அனுப்பி பின்னர் அங்கிருந்து மேற்கு வங்கத்திற்குப் பணம் போயுள்ளது.
தீவிரவாத குழுக்கள்:
வங்கதேச விசாரணையாளர்கள் கூறுகையில், மேற்கு வங்கத்தில் தீவிரவாதிகளுக்கு முழுப் பாதுகாப்பு கிடைத்து வருகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சில உயர் மட்டத் தரப்பு அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால்தான் அவர்களை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சஜீத் தான், மேற்கு வங்கத்தில் உள்ள குழுக்களுக்கும், வங்கதேச குழுக்களுக்கும் இடையே பாலம் போல திகழ்ந்துள்ளார். வங்கதேசத்தின் சிட்டகாங் வழியாகத்தான் தீவிரவாதிகள் வந்து போயுள்ளனர். அவர்களது போக்குவரத்தும் சிட்டகாங் வழியாகத்தான் நடந்துள்ளது என்றும் வங்கதேச விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
அமலாக்கப் பிரிவு:
இதற்கிடையே, தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களைத் தருமாறு மத்திய அமலாக்க இயக்குநரகத்திடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி கோரியுள்ளது. சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான பணம் வங்கதேசத்திற்குப் போனது குறித்த விவரத்தை சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் கண்டுபிடித்துள்ளன. இதுதொடர்பான தகவல்களை தற்போது அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு வழங்கவுள்ளது. அதேபோல சாரதா சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் சிபிஐ மேலும் விசாரணை நடத்தவுள்ளது.