மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை தோல்வி.. நாடு முழுக்க ஜூலை 29 முதல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!
டெல்லி: மத்திய அரசுடனான, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி 29ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் 4 துணை வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி ஹைகோர்ட் வேலை நிறுத்தத்திற்கு தற்காலிக தடை விதித்தது. இதனால், வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 29
எனவே, ஜூலை 29ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதையடுத்து, ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த மத்திய தொழிலாளர் நல ஆணையர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
போராட்டம்
இதுகுறித்து டெல்லியில், இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: மத்திய அரசுடனான, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி 29ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
10 லட்சம் ஊழியர்கள்
நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.