செல்லாத ரூபாய் நோட்டுகளை ஜூலை 20 வரை டெபாசிட் செய்ய.. வங்கிகளுக்கு காலக்கெடு
பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ள வரும் ஜூலை 20ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய, ஜூலை 20ம் தேதி வரை வங்கிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதையடுத்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி கிளைகளிலும் பொதுமக்கள் டெபாசிட் செய்து வந்தனர்.
2017 மார்ச் 31ம் தேதியுடன், பொதுமக்கள் வங்கிகள், ரிசர்வ் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கெடு முடிவடைந்தது. இதையடுத்து, வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இதன்படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம், வங்கி நிறுவனங்கள், வரும் ஜூலை மாதம் 20ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என்று, மத்திய அரசு தற்போது மீண்டும் அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை, வங்கிகள் தவறவிட வேண்டாம் என்றும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகள் இன்னும் கூடுதலாக டெபாசிட் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.