திகார் கைதிகளுக்கு சிறைக்குள்ளே செல்போன் வீசும் ‘பவுலர்கள்’... ஓடி ஓடி பிடிக்கும் போலீஸ்!
டெல்லி: டெல்லியில் உள்ள திகார் சிறைக் கைதிகளுக்கு வெளியில் இருந்த படி உறவினர்கள் செல்போன், சிகரெட் மற்றும் போதைப் பொருட்களை வீசுவது தொடர்கதையாகி உள்ளது. இவ்வாறு சிறைக்குள் வீசப்படும் பொருட்களைப் பிடிப்பதற்கென்றே கூடுதலாக போலீசார் பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் திலக் நகரில் அமைந்துள்ளது திகார் சிறை. நாட்டிலேயே மிகப்பெரிய சிறை என்ற பெருமை திகாருக்கு உண்டு. காலப்போக்கில், சிறையைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் முளைத்து விட்டன. இதனால், தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் திகார் சிறை அமைந்திருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.
இது சிறையில் உள்ள கைதிகளுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கைதிகளுக்கு பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், சமீபகாலமாக கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறைக்கு வெளியில் இருந்தபடி செல்போன்களை பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றி, உள்ளே தூக்கி வீசுவது அதிகரித்துள்ளதாம்.
இவை பெரும்பாலும் சிறையைச் சுற்றி உள்ள கட்டிடங்கள் மற்றும் மேம்பாலத்தில் இருந்து வீசப்படுவதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். சிறைக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வீசப்படும் பொருட்கள் அறை எண் 8, 9,1 பகுதியிலும், ஜஹாங்கிர் பூரிலிருந்து வீசப்படும் பொருட்கள் அறை எண் 4 பகுதியிலும், திலிக் நகர் பகுதியில் இருந்து வீசப்படும் பொருட்கள் சிறை எண் 1 அல்லது 2 பகுதியிலும் விழுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
தினமும் இவ்வாறு வெளியில் இருந்து வீசப்படும் ஒன்று அல்லது இரண்டு செல்போன்கள் மீட்கப் படுவதாகவும், இதைத் தடுக்க கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாகவும் திகார் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு தான் போலீசாரைக் காவலுக்கு வைத்தாலும், சிறையின் இருப்பிடத்தை மாற்றினால் மட்டுமே இத்தகைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும். எனவே, இது தொடர்பாக டெல்லி மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.