கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் 'சீனி' பங்கேற்கலாமா?பி.சி.சி.மனுவை வாபஸ் பெற சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியக் கூட்டத்தில் (பி.சி.சி.ஐ) என்.சீனிவாசன் பங்கேற்கலாமா என்பது குறித்து தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று பி.சி.சி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் அண்மையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான என்.சீனிவாசன் பங்கேற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பிக்ஸிங் விவகாரத்தில் உச்சநீதிமன்றம்தான் சீனிவாசனை ஒதுங்கியிருக்க அறிவுறுத்தியிருந்தது. அதனால் அவர் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என்ற முறையில் தாம் கலந்து கொள்ள அதிகாரம் இருக்கிறது என்பது என்.சீனிவாசன் வாதம்.
இதனால் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டங்களில் என்.சீனிவாசன் கலந்து கொள்ள முடியுமா? இல்லையா? என்பது குறித்து தெளிவான விளக்கம் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கிரிக்கெட் வாரியம் தமது மனுவை திரும்ப பெற வேண்டும்; இந்த விவகாரத்தில் சட்ட விதிகளின் படி கிரிக்கெட் வாரியம் செயல்படலாம் என்று கூறியதுடன் ஒவ்வொரு முறையும் விளக்கம் கேட்டு இது போன்று மனு தாக்கல் செய்வது ஏற்பபுடையது இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.