தினமும் தூங்கும் முன்பு எத்தனை ஏழைகளுக்கு உதவினீர்கள் என யோசியுங்கள்.. கலெக்டர்களுக்கு மோடி அட்வைஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், கோப்புகளை தாண்டி, களத்திற்கே கலெக்டர்கள் சென்று நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். ஏழைகளை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு நாம் இன்று எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்துள்ளோம் என நினைத்து பார்த்துவிட்டு தூங்குங்கள் என்றும் மோடி தெரிவித்தார்.
2022ம் ஆண்டுக்குள் உங்கள் மாவட்டங்களை எப்படி உருமாற்றி பார்க்க ஆசைப்படுகிறீர்களோ அப்படியான ஒரு ஆவணத்தை ஒரு வாரத்தில் கலெக்டர்கள் தயார் செய்ய வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர்கள் கட்டாயமாக பீம் ஆப், எல்.இ.டி பல்புகளின் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான நேரங்களில் திட்டங்கள் தோல்வியடைவதற்கு காரணம் அவை பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்கள் இல்லாதது தான் என மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கல்வி, குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்துமாறும் மோடி கேட்டுக்கொண்டார்.