சிக்கல் அதிகரிப்பு.. நீதிபதி கர்ணனிடம் சுப்ரீம் கோர்ட் வாரண்ட்டை சமர்ப்பித்த மே.வங்க டி.ஜி.பி
நீதிபதி கர்ணனின் வீட்டுக்கு நேரில் சென்ற டிஜிபி வாரண்டை வழங்கினார். இதனால் இந்த பிரச்சினையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
கொல்கத்தா: ஊழல் பற்றிய பேச்சுக்காக, கொல்கத்தா ஹைகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பித்து உச்சநீதிமன்றம், உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், என் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது, என்னை தொல்லை செய்வதற்குத்தான் என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதினார் நீதிபதி கர்ணன். அதில், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.14 கோடியை வழங்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மார்ச் 31ம் தேதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட், மேற்கு வங்க போலீஸ் டிஜிபி மூலமாக இன்று கர்ணனிடம் அளிக்கப்பட்டது. நீதிபதி கர்ணனின் வீட்டுக்கு நேரில் சென்ற டிஜிபி வாரண்டை வழங்கினார். இதனால் இந்த பிரச்சினையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
நீதிபதி கர்ணனிடம் வாரண்ட் கொடுக்கப்படும்போது, சுமார் 100 போலீசார் அவரது வீட்டை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். ஊடகங்களும் அங்கு குவிந்தன. இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.