மேற்கு வங்கத்தை குடியரசு தின விழாவில் அனுமதிக்காததற்கு என்ன காரணம்?
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பான முடிவை மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் எடுத்தது. மேற்கு வங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்த செய்தி தேசிய அளவிலானதாக இல்லை என்பதால்தான் அந்த ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம்.
மேற்கு வங்கத்தை குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதிக்காதது குறித்து முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மையில், அந்த மாநிலத்தின் ஊர்தி குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு திருப்தி ஏற்படாததால்தான் அனுமதி கிடைக்கவில்லையாம்.
பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளையும் பார்த்து ஆய்வு செய்து அதன் பின்னரே அனுமதி கொடுத்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம். எனவே இதில் அரசியல் உள்நோக்கம் என்று எதுவும் கிடையது என்று ஒரு அதிகாரி ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் ஊர்தியில் இருந்தது என்ன?:
மேற்கு வங்க மாநில அரசு தனது மாநிலத்தில் அமல்படுத்தப்படும் கன்யாஸ்ரீ திட்டம் குறித்து ஊர்தியில் பிரதானமாக காட்ட விரும்பியுள்ளது. இதுகுறித்து திரினமூல் காங்கிரஸ் தலைவரான டெரக் ஓ பிரையனும் கூட தனது டிவிட்களில் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்தும் பிரையன் தனது டிவிட்களில் பெரும் வேதனை மற்றும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்க அரசு அதிகாரிகளும் கூட ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பெண் குழந்தைகளுக்கான அருமையான திட்டம்தான் கன்யாஸ்ரீ திட்டமாகும். உண்மையிலேயே இது நல்ல திட்டம்தான்.
இருப்பினும் மத்திய அரசு தான் கொண்டு வந்துள்ள பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டத்தை பிரதானப்படுத்துவதற்காக தனது மாநில ஊர்திக்கு அனுமதி வழங்காமல் தடை செய்து விட்டதாக மேற்கு வங்கத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அப்படியெல்லாம் இல்லை:
இருப்பினும் மேற்கு வங்கம் மட்டும் அனுமதி தராமல் தடுக்கப்படவில்லை. மாறாக பல மாநிலங்கள் இதுபோல இடம் பெறாமல் போயுள்ளன என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அலங்கார ஊர்திகள் அகன்ற செய்தியுடன் கூடியதாக இருக்க வேண்டும். மாநிலத்தின் கலாச்சாரம், வரலாறு, பொருளாதாரம் போன்றவற்றை சித்தரிப்பதாக அது இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தின் ஊர்தியில் ஒரே ஒரு திட்டம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால்தான் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார் அந்த அதிகாரி.
மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் டெல்லி, கேரளா, தமிழ்நாடு, ஒடிஷா, பீகார் மாநில ஊர்திகளுக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக மத்திய பாதுகாப்புத்துறை கூறுகிறது. பாஜக அல்லாத மாநிலங்கள் என்று பாரபட்சம் எல்லாம் பார்க்கவில்லை என்றும் அது கூறுகிறது.
திறமை, தகுதி அடிப்படையில்தான் ஊர்திகள் அணிவகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசுதான் நடந்து வருகிறது. ஆனால் அந்த மாநிலம் அணிவகுப்பில் கலந்து கொண்டது என்றும் அந்த அதிகாரி விளக்கியுள்ளார்.