இந்து தலைவர்களை கொல்ல திட்டம்.. தீவிரவாத ஆதரவாளர்கள் 13 பேருக்கு 5 வருடம் சிறை!
பெங்களூர்: கர்நாடகா, தெலுங்கானாவில் இந்து மத முன்னணி நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 13 பேருக்கு தலா 13 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூர், ஹூப்ளி, தெலுங்கானாவில் உள்ள இந்து நிர்வாகிகள் சிலரை தீர்த்துக்கட்ட முயன்ற குற்றச்சாட்டின்பேரில் 2012ல் 14 பேர் பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி இந்த வழக்கை விசாரித்து வந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஜாகிர் என்பவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.
எனவே எஞ்சிய 13 பேரும் குற்றவாளிகள் என நேற்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்கள் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவோர் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததை கோர்ட் உறுதி செய்துள்ளது.
தண்டனை விவரம் நேற்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் கோர்ட் அறிவித்தது. ஆனால், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என கோர்ட் மதியம் மீண்டும் அறிவித்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதன்படி குற்றவாளிகள் 13 பேருக்கும் தலா 5 வருடம் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
தண்டனை பெற்றவர்கள் விவரம்: சோகிப் அகமது மிஸ்ரா, அப்துல் ஹகீம் ஜாம்தார், ரியாஸ் அகமது பைஹட்டி, முகமது அக்ரம், உபேதுல்லா பகதூர், வாகீத் ஹுசைன், ஜபார் இக்பால் சோலாபுர், முகமது சித்திக் லஷ்கர், மெகபூப் பாகல்கோட், ஒபைட்-உர்-ரஹ்மான், நயீம் சித்திக், இம்ரான் அகமது, சையது தன்சீம் அகமது.