குப்பை பிரச்சனையை தீர்க்க வேட்டியை மடிச்சுக்கட்டிய பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பூங்கா நகர் என்று அழைக்கப்படும் பெங்களூர் குப்பை நகராக மாறிக் கொண்டிருக்கிறது. இது பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு கவலை அளித்துள்ளதே தவிர அதிகாரிகள் கண்டுகொள்வதாக இல்லை. குப்பையை அகற்றுவது குறித்து கர்நாடக அரசு பெரிதாக அறிவித்தாலும் அது அறிவிப்போடு தான் நிற்கிறது.
பெங்களூரில் குப்பை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குப்பை மேலாண்மை முறை மோசமாக உள்ளதும், முறையான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளதும் தான் பெங்களூரில் திரும்பும் பக்கமெல்லாம் குப்பையாக கிடக்க காரணம். நாள் ஒன்றுக்கு பெங்களூரில் 5 ஆயிரம் டன் குப்பை சேர்கிறது. அவ்வளவு குப்பையை அப்புறப்படுத்த 14 ஆயிரம் பேரை வேலைக்கு வைத்துள்ளது பெங்களூர் மாநகராட்சி.
சித்தராமையா
கடந்த 2014ம் ஆண்டில் குப்பை இல்லா பெங்களூர் திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். ஆனால் அது போதுமானதாக இல்லை. ஏனென்றால் திட்டம் பேப்பர் அளவில் தான் உள்ளதே தவிர செயல்படுத்தப்படவில்லை. பெங்களூரில் சேகரிக்கப்படும் குப்பை நகரின் தென் பகுதியில் உள்ள மண்டூர் கிராமத்தில் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் குப்பையை கொட்ட மண்டூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாநகராட்சிக்கு பிரச்சனையாக உள்ளது.
போராட்டம்
குப்பையை அள்ளி வரும் வாகனங்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராடினர். குப்பை கொட்டப்படுவதால் தங்கள் கிராம மக்களுக்கு சுகாதாரக் கேடி ஏற்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுத்தமான இந்தியா
மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி பிரபலமாக்கியுள்ள நிலையில் பெங்களூர் குப்பை நகராக மாறி வருகிறது. இந்நிலையில் பெங்களூரின் பெயரை காப்பாற்ற மக்கள் முன் வந்துள்ளனர்.
ஆன்லைன் மனு
பத்ரிநாத் விட்டல் என்ற பெங்களூர்வாசி நகரை சுத்தமாக்க ஒரு ஐடியா தெரிவித்துள்ளார். மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசுக்கு அளிக்க ஆல்லைனில் மனு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அந்த மனுவில் பெங்களூர்வாசிகள் குப்பை பிரச்சனை பற்றி தங்களின் கருத்தை தெரிவிக்கலாம்.
(ஆன்லைன் கோரிக்கையில் நீங்களும் கையெழுத்திட இங்கே க்ளிக் செய்க )
நம்மால் முடியும்
பல நகரங்கள் குப்பை பிரச்சனையில் இருந்து விடுபட்டுள்ளது என்கிறார் விட்டல். குடிமக்கள் சிலரின் கூட்டு முயற்சியால் சில நகரங்களில் குப்பை பிரச்சனை தீர்ந்துள்ளது என்றால் பெங்களூரில் நம்மால் முடியும் என்கிறார் விட்டல்.