ரூ.50 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டு பதுக்கிய ரவுடி.. வீட்டுக் கதவை உடைத்து நுழைந்த பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் பிரபல ரவுடி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கிருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரின் முக்கியமான மையப்பகுதியான, மெஜஸ்டிக் ஏரியாவின் அருகேயுள்ளது ஸ்ரீராமபுரம். இங்கு 'பாம் நாகா' என்ற பிரபல ரவுடி வீடு அமைந்துள்ளது. எம்.எல்.ஏவாக முயன்று சுயேட்சையாக தேர்தலில் நின்று தோல்வியை தழுவியிருந்தார்.
இந்நிலையில் இவரது மனைவியை பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடச் செய்து கவுன்சிலராக்கியுள்ளார்.
அதிகாலை அதிரடி
இவரது வீட்டில் பழைய ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் இன்று அதிரடியாக அதிகாலை 5 மணிக்கு வீட்டை சுற்றி வளைத்தனர்.
கதவை உடைத்து
கதவை தட்டியபோது வீட்டுக்குள் யாருமே திறக்காத காரணத்தால் வீட்டின் கிரில்களை அறுத்து எறிந்து, வீட்டுக்கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர் போலீசார். அதற்குள்ளாக பெண்மணி ஒருவர் வந்து குறுக்கே நின்று பெரும் கலாட்டா செய்தார். எனவே அருகேயுள்ள காவல் நிலையங்களிலுள்ள பெண் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு அந்த பெண்மணி இழுத்துச் செல்லப்பட்டார்.
பல மூட்டைகள்
இப்படி பல தடைகளை தாண்டி வீட்டுக்குள் சென்ற போலீசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அங்கு பல பைகளில், ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்துமே செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களாகும். பாம் நாகா, பண மோசடியில் ஈடுபட்டு வந்தது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
போலீஸ் தேடுதல் வேட்டை
பாம் நாகா பக்கத்து கட்டிடங்களுக்கு பாய்ந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட பல குற்றவழக்குகள் நிலுவையிலுள்ளன. தொடர்ந்து பாம்நாகா வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தலைமறைவாகியுள்ள பாம்நாகாவை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.