பெங்களூர் பள்ளி விடுதி துப்பாக்கிச்சூட்டில்... தோழி காதில் பாய்ந்த குண்டு... ஆபரேஷன் நடந்தது!
பெங்களூர்: பெங்களூரில் பள்ளி விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தோழியை காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்த மாணவி சிரிஷாவுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த கௌதமி(18) என்பவர் பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே உள்ள காடுகோடியில் இருக்கும் பிரகதி உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அந்த பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக பியூன் வேலை பார்த்து வந்த தும்கூரைச் சேர்ந்த மகேஷ்(30) கௌதமியை ஒரு தலையாக காதலித்துள்ளார். தன்னை காதலிக்குமாறு கௌதமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தனது காதலை ஏற்க மறுத்த கௌதமி மீது அவர் கோபம் கொண்டு நேற்று இரவு 10 மணிக்கு பள்ளி விடுதிக்குள் புகுந்துள்ளார். கௌதமியின் அறைக்குள் புகுந்த அவர் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக நான்கு முறை சுட்டார். இதில் ஒரு குண்டு கௌதமியின் வாயிலும், மற்றொன்று அவரது தலையிலும் பாய்ந்தது. இதில் கௌதமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த அறையில் இருந்த கௌதமியின் தோழி சிரிஷாவின் இடது காதை ஒரு குண்டு துளைத்தது. இதில் படுகாயம் அடைந்த சிரிஷாவுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கௌதமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தேர்வை எழுதி முடித்த கௌதமி ஊருக்கு கிளம்பத் தயாரான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கௌதமியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய மகேஷ் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி விடுதிக்கு சென்ற போலீசார் அங்கு மாணவிகள் தங்கிய இடத்திற்குள் மகேஷ் எப்படி நுழைந்தார் என்று வார்டனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.