காவிரி: மோடி தலையிட கோரி பெங்களூர் மாணவர்கள் கடிதம்!
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பெங்களூரு மாணவர்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்றதால் வன்முறை ஏற்பட்டது. இதனால் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கடந்த 20-ந் தேதி, மேலும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 21-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடக சட்டசபையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தின.
ஆனால் வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் பிரதமர் மோடி தலையீடு என்பது சாத்தியம் இல்லாதது என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர்கள் கூறினர்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பெங்களூரு மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.