இந்தியாவில் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள்.. அதிர்ச்சியளிக்கிறது புள்ளி விவரம்
டெல்லி: இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்பது தேவைக்கு ஏற்ற வகையில் இல்லை என்பது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய தொழிலாளர் சந்தை தற்போது ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. 2010-11 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வேளாண் துறையில் அல்லாத துறைகளில் 33 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மெக்கின்ஸி குளோபல் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த துறைகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இதன் பொருளாகும்.
70 லட்சம் வேலைகள்தான்
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்ன தெரியுமா. இதே காலகட்டத்தில் வேளாண் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் 26 மில்லியன் அளவுக்கு சரிவடைந்துள்ளன. எனவே, 2010-11 மற்றும் 2014-5க்கு உட்பட்ட நான்கு வருட காலப்பகுதியில் நிகர வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்பது ஆண்டுக்கு 7 மில்லியன் என்ற அளவாக மட்டுமே உள்ளது.
இளைஞர்கள் அதிகம்
இக்காலகட்டத்தில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு 456 மில்லியனிலிருந்து 463 மில்லியனாக அதிகரித்துள்ளது. மொத்த அளவில், வேளாண் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதை போல தெரிந்தாலும் கூட, இந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை, வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஈடு செய்யும் அளவுக்கு இல்லை. மிக குறைவாக உள்ளது.
துல்லியமானது
வேலை வாய்ப்பு ஆய்வு என்பது, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மற்றும் வேலைத் தொழிலாளர் குழுவின் வருடாந்திர ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை. எனவே இந்த ஆய்வு ஏறத்தாழ துல்லியமானது.
சில துறைகளில் முடக்கம்
2011-2012ல் உலகெங்கிலும், பொருளாதார மந்த நிலை காணப்பட்டது. அக்காலகட்டத்தில் 11 மில்லியன் வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டது, குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 22 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்பு வளர்ந்தது. வர்த்தகம், விருந்தோம்பல் (hospitality), கட்டுமானம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்த வேலைகள் பெருமளவில் உருவாக்கப்பட்டன, அதே நேரத்தில் சுரங்கம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகள் சரிந்துவிட்டன.
வேலையில்லாத திண்டாட்டம்
மொத்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம், 2011 ல் 55.4 சதவிகிதத்திலிருந்து 2015ல் 52.4 சதவிகிதம் என்று வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால் வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.