நாடு மாறி விட்டது, அரசியல் மாறி விட்டது, மக்களும் மாறி விட்டனர்.. இதை காங்கிரஸ் உணர வேண்டும்
ஏஎன்ஐ செய்தியாளரிடம் முரட்டுக்காளையாக மாறி சீறிய ராபர்ட் வதேரா பிரச்சினை இப்போது காங்கிரஸை சுழற்றியடிக்கிறது. ஆனால் உண்மையில், இதை விட பல பெரிய பிரச்சினைகள் அந்தக் கட்சியை சுற்றிச் சுற்றிப் போட்டு வருகிறது.
தொடர் தேர்தல் தோல்விகள், சரியான தலைமை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வதேரா பிரச்சினை வேறு வந்து காங்கிரஸை வாட்டி எடுத்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய காங்கிரஸின் சரிவு மேலும் மேலும் சிக்கலாகி வருவது அக்கட்சியை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
2012 முதல்
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலிலிருந்துதான் காங்கிரஸுக்குப் பிரச்சினை தொடங்கியது. அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது காங்கிரஸ். தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநில தேர்தல்களிலும் அது மண்ணைக் கவ்வியது. டெல்லி தேர்தலிலோ 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
எல்லாவற்றுக்கும் உச்சமாக கடந்த மே மாதம் லோக்சபாவுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக சொற்பமான இடங்களிலேயே அது வெல்ல முடிந்தது. ஆட்சியை இழந்தது.
சோதனை அத்துடன் முடியவில்லை. தொடர்ந்து ஹரியானாவில் பெரும் தோல்வியைத் தழுவியது. முதல் முறையாக பாஜக ஆட்சிக்கு வர வழி விட்டது. மகாராஷ்டிராவிலும் பாஜகவிடம் தோற்றுப் போனது. மோடி அலை இல்லை என்று கூறப்பட்டாலும் கூட தொடர்ந்து பாஜக சாதித்ததன் மூலம் அக்கட்சி மேலும் தனது பிடியை இறுக்கமாக்கிக் கொண்டது.
இதனால் திக்குத் தெரியாத நிலையில் எந்தவிதமான இலக்கும் தென்படாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல விஸ்வரூபம் எடுத்த மோடிக்கு முன்பு காங்கிரஸ் படு சாதாரணமான நிலைக்குப் போய் விட்டது. மோடி அலையில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது.
ராகுல் காந்தியின் தலைமைத்துவ திறமை குறித்த கேள்விகள் அலை மோதிக் கொண்டிருக்கின்றன. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தத்தளித்துக் கொண்டுள்ளது.
வதேரா விஷயத்தில் காங்கிரஸின் தவறு
ராகுல் காந்தியை மீண்டும் உயர் நிலைக்குக் கொண்டு அவரது தீவிர விசுவாசியான திக்விஜய் சிங் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில்தான் வதேரா விவகாரம் வந்து சேர்ந்தது. அதை காங்கிரஸ் கண்டிக்கவும் இல்லை, வதேராவின் செயல் தவறு என்று சொல்லவும் இல்லை. இதனால் அந்தக் கட்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் வதேரா மேற்கொண்ட நிலப் பரிவர்த்தனை பிரச்சினை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலிலும் இது பிரச்சினையாக இருந்தது. இப்போது ஹரியானா தேர்தலிலும் அது எதிரொலித்தது. தேர்தல் முடிந்த பிறகும் பிரச்சினையாக உள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஹூடா அரசு ராகுல் காந்திக்குக் காட்டிய சலுகைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி கேட்டபடியே உள்ளன. இப்போது செய்தியாளரிடம் ராகுல் காந்தி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது.
காங்கிரஸின் உண்மையான பிரச்சினை
மோடி தலைமையிலான பாஜகவை எப்படி சமாளிப்பது, கையாளுவது என்பது இன்னும் கூட புரிபடாமல் தவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் தலைமையிலும் கூட பெரும் குழப்பம்தான். முன்பு போல கட்சி விவகாரங்களில் ராகுல் காந்தி அவ்வளவாக விருப்பம் காட்டுவது போலத் தெரியவில்லை.
தேர்தல் தோல்விகளுக்கான காரணத்தைக் கூட இன்னும் கண்டுபிடிக்காமல் உள்ளது காங்கிரஸ். அதன் தவறுகளைச் சரி செய்யவே அதற்கு நேரம் போதவில்லை. தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பத்தை பழி கொடுக்க விரும்பவில்லை காங்கிரஸ். இதுதான் அக்கட்சியின் உண்மையான பிரச்சினை.
எனவே வதேரா விவகாரத்தில் காங்கிரஸ் நடந்து கொள்வதிலும், நடந்து கொண்டதிலும் ஆச்சரியமே இல்லை. மேலும் வதேரா விவகாரத்தில் மீடியாவுக்கு எதிராக காங்கிரஸ் நடந்து கொள்வதால் அந்தக் கட்சிக்கு எந்த லாபமும் இல்லை.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் எந்தப் பாதையில் போவது என்று தெரியாமல் நிற்கிறது காங்கிரஸ். ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் பிரசாரம் சுத்தமாக எடுபடவில்லை. ஒரு விறுவிறுப்பும் இல்லாமல்தான் பிரசாரத்தை மேற்கொண்டது காங்கிரஸ்.
அமீத் ஷா தலைமையில் பாஜகவினர் செய்த திட்டமிட்ட தெளிவான பிரசாரத்தால் காங்கிரஸ் அடிபட்டுப் போய் விட்டது. ஒவ்வொரு தேர்தல் முடிவும் பாஜக - காங்கிரஸ் இடையிலான வித்தியாசத்தை நிரூபித்து வருகிறது.
நியாயப்படுத்த முடியாத வதேரா விவகாரத்தை ஒவ்வொரு முறையும் நியாயப்படுத்த முயன்று காங்கிரஸ் தோல்வியிலேயே போய் முடிகிறது. கட்சியை விட காந்தி குடும்ப விவகாரங்கள்தான் முக்கியம் என்று காங்கிரஸ் நினைப்பது அதற்கு பாதகமாகவே போய்க் கொண்டிருக்கிறது.
கட்சிய அடிமட்ட அளவில் சீரமைத்து தூக்கி நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்காதவரை அதன் தோல்விகளும், தொய்வுகளும் தொடரத்தான் செய்யும். தனது கொள்கையை அது சீரமைக்க வேண்டும். ராகுல் காந்தியைக் காக்க முன்பு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் படாதபாடு பட்டனர். இப்போது வதேராவுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இது கட்சிக்கு சற்றும் உதவாது.
இது போதாதென்று காங்கிரஸில் அதிருப்தியாளர்கள் பெருக ஆரம்பித்துள்ளனர். கட்சி ஆங்காங்கு பிளவுபட ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் ஜி.கே.வாசனால் கட்சி பிளவுபட்டுள்ளது. இதேபோல மேலும் பல பிளவுகளை எதிர்பார்க்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
நாடு மாறி விட்டது. நாட்டின் அரசியலும் மாறி விட்டது. மக்கள் தீரமிக அரசியல் செயல்பாடுகளை விரும்ப ஆரம்பித்து விட்டனர். வாரிசு அரசியல் முடிந்து போன கதையாகி விட்டது. வாரிசுகளைக் காட்டி மக்கள் வாக்குகளை அள்ளிய காலம் போய் விட்டது. இந்திய அரசியல் முழுமையான ஜனநாயகமாக இன்று மாறியுள்ளது. இதை காங்கிரஸ் இப்போது உணர்ந்தாக வேண்டும்.