பவானி சிங் வாதத்தை கருத்தில் கொள்ளாவிட்டாலும் வழக்கிற்கு பாதிப்பு இல்லை.. எப்படி தெரியுமா?
டெல்லி: ஜெயலலிதா அப்பீல் மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜரானது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
அரசு வழக்கறிஞர் வாதத்தையே கணக்கில் கொள்ளாமல், அது எப்படி ஹைகோர்ட் தீர்ப்பளிக்க முடியும்..வழக்கை விரைந்து முடிப்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க வழிவகுத்துவிடுமே..என்ற சந்தேகங்கள் எழலாம்.
ஆனால் அவ்வாறெல்லாம் பிரச்சினை ஆகாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வெங்கடேசன் கூறியதாவது: 90 நாட்களுக்குள் ஜெயலலிதா அப்பீல் வழக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக ஹைகோர்ட் உள்ளது.
கோர்ட்டுக்கு கட்டாயம்
எனவேதான் நீதிபதி குமாரசாமி தினசரி விசாரணையை நடத்தினார். ஆனால், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதற்கடுத்த சில நாட்களிலேயே, தமிழக அரசு பவானிசிங்கை, மேல்முறையீட்டு வழக்குக்கான அரசு வக்கீலாக நியமித்துவிட்டது. எனவே கர்நாடகம், வக்கீல் நியமனத்தில் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், சம்மந்தப்பட்ட மாநிலத்தை தவிர்த்து வேறு மாநிலம், அரசு வக்கீலை நியமிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது.
ஒன்றுக்கு ரெண்டு இருக்குதே
எனவே, அரசு வக்கீல் வாதம் கணக்கில் எடுக்கப்படாது. ஆனால், இந்த வழக்கில், அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டுமே, குற்றவாளிகளுக்கு எதிரான தரப்பாக உள்ளன. அதாவது ஒரு அரசு தரப்புக்கு பதிலாக, இந்த வழக்கில், 2 எதிர்தரப்பு வாதங்கள் ஏற்கப்பட்டுள்ளது.
பாதிப்பில்லை
எனவே, பவானிசிங் வாதத்தை கழித்துவிட்டு பார்த்தால், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு ஆகியோரின் வாதங்கள் உள்ளன. எனவே அரசு வக்கீல் வாதத்தை கணக்கில் எடுக்காவிட்டாலும் வழக்கில் அது பாதிப்பை ஏற்படுத்தாது.
நல்ல தீர்ப்பு
எனவேதான், உச்சநீதிமன்றம் இந்த மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பால், காலக்கெடுவிற்குள்ளும் வழக்கை முடிக்க முடியும், அரசு வக்கீல் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பும் புது உதாரணம் தந்துவிடும். இவ்வாறு வெங்கடேசன் தெரிவித்தார்.