எந்தத் தொந்தரவும் இல்லை, பிரச்சினையும் இல்லை, விலகவும் மாட்டேன் - பவானி சிங் உறுதி!
பெங்களூரு: எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எந்தத் தொந்தரவும் இல்லை. நான் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் தொடர்ந்து பங்கேற்பேன். அதிலிருந்து விலக மாட்டேன் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரித்து வருகிறார்.
இதிலும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானிசிங்கே ஆஜராகி வாதிட்டு வருகிறார். இவரை நீக்க திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு கடுமையாக முயற்சித்து அடுத்தடுத்து வழக்குத் தொடுத்து வந்தது. சுப்பிரமணியம் சாமியும் தன்னை இந்த வழக்கில் இணைக்க போராடி வருகிறார்.
இந்த நிலையில், பவானிசிங் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும், ராஜினாமா கடிதத்தை தமிழக ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளிடம் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தன் மீது பழி சுமத்தப்படுவதால் அதிருப்தி அடைந்து அவர் இந்த வழக்கில் இருந்து விலகியதாகவும் காரணம் கூறப்பட்டது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்பளம் குறைவாக இருப்பதாக அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை பவானி சிங் உடனடியாக மறுத்து விட்டார். இந்த நிலையில் தினத்தந்திக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் நான் ஆஜராகி வாதாட தமிழக ஊழல் தடுப்பு துறை என்னை சிறப்பு வக்கீலாக நியமனம் செய்துள்ளது. நான் ஆஜராகி எனது பணியை செய்து வருகிறேன். அரசு சிறப்பு வக்கீல் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது.
இந்த வழக்கில் ஆஜராவதில் எனக்கு பிரச்சினையோ அல்லது தொந்தரவோ எதுவும் இல்லை. என் மீது கூறப்படும் புகார்கள் உண்மைக்கு புறம்பானவை. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி நான் கவலைப்படுவது இல்லை. நான் எனது பணியில் தான் முழுகவனம் செலுத்துகிறேன். எனக்கு ஆகாதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்.
இந்த வழக்கில் அரசு சார்பில் நான் தொடர்ந்து ஆஜராவேன். எக்காரணம் கொண்டும் வழக்கில் இருந்து விலக மாட்டேன் என்பதை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன் என்றார் பவானி சிங்.