ஆளுநர் மவுனம்- 130 எம்.எல்.ஏக்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நாளை 'அணிவகுப்பு' நடத்தும் நிதிஷ்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தமக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுக்காத நிலையில் 130 எம்.எல்.ஏக்களுடன் நாளை ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாக பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வரான ஜிதன்ராம் மஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி பதவியில் இருந்து விலக சொன்னது. ஆனால் ஜிதன்ராம் மஞ்சியோ, மாநில சட்டசபையை கலைப்பேன்; நானே முதல்வர்க நீடிப்பேன் என்று அடம் பிடித்து வருகிறார்.
இதனால் அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் பீகார் சட்டசபை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத்தை நேரில் சந்தித்த நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க தமக்கு அழைபு விடுக்குமாறு உரிமை கோரினார். அவர் தம்முடன் 130 எம்.எல்.ஏக்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.
நிதிஷ்குமாருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும் மஞ்சியும் ஆளுநரை சந்தித்து சட்டசபையில் வாக்குச் சீட்டு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் எனக்கான ஆதரவை நிரூபிப்பேன் என்று கூறினார்.
தற்போது மஞ்சியை பாரதிய ஜனதா ஆதரிக்கிறது. இந்த நிலையில் பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ஆட்சி அமைக்க உரிமை கோரி 24 மணிநேரத்துக்கும் மேலாகியும் ஆளுநர் அழைப்பு விடுவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 130 எம்.எல்.ஏக்களும் இன்று மாலை டெல்லி செல்கிறோம். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி முன்பாக என்னை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும். இதற்காக நேரம் ஒதுக்குமாறும் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளே என்றார்.
இதனால் பீகார் அரசியல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.