லாலு பிரசாத் மகனை கல்யாணம் செய்ய க்யூவில் நிற்கும் 44,000 பெண்கள்.. வாட்ஸ்அப்பில் 'சுயம்வரம்'!
பாட்னா: டெலிகேட் பொசிஷனில் சிக்கி தலையை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டுள்ளார் லாலு பிரசாத்தின் இளைய மகனும், பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஷ்வி யாதவ்.
நிதிஷ் குமார் அரசில் துணை முதல்வராக பணியாற்றும் தேஜஷ்வி யாதவுக்கு, பொதுப்பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரி.. இது கம்ப்யூட்டர் காலமாச்சே, மக்களின் குறைகளை வாட்ஸ்அப்பில் கேட்டு அதை நிவர்த்தி செய்யலாம் என யோசித்து, தனது போன் நம்பரை பகிர்ந்த தேஜஷ்வி யாதவுக்கு வந்தது என்னவோ, "மாமா... ஐ, லவ்யூ" டைப்பிலான மெசேஜ்கள்தான்.
ஒன்றல்ல, இரண்டல்ல, பிரியா, அனுபமா, மனிஷா, கஞ்சன் என மொத்தம் 44 ஆயிரம் இளம் பெண்களிடமிருந்து காதல் விண்ணப்பங்கள் வந்து கொட்டியுள்ளன. 3 ஆயிரம் மெசேஜ்கள் மட்டுமே, சாலையை செப்பனிட கோரி வந்துள்ளன.
ஏதோ, திருமண வெப்சைட்டில் விண்ணப்பிப்பதை போல, உயரம், எடை, கலர் என அங்க அடையாளங்கள் அத்தனையையும், குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் அந்த பெண்கள் மெசேஜ்களை அனுப்பியுள்ளனர்.
"நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகவில்லை. இந்த மெசேஜ்களை எனது மனைவி பார்த்திருந்தால் அவ்வளவுதான்" என்று தனது தந்தைக்கே உரிய நகைச்சுவை பாணியோடு நிருபர்களிடம் சிரித்தபடியே கமெண்ட் அடித்துள்ளார் 26 வயதாகும், தேஜஷ்வி யாதவ்.
பீகார் மாநிலத்தில், இன்றைய ரேஞ்சில், தேஜஷ்வி யாதவும், அவருக்கு அடுத்த அண்ணனும் சுகாதாரத்துறை அமைச்சருமான பிரதாப் யாதவும்தான், இளம் பெண்களின் கனவு கண்ணன்களாக சுற்றி வருகிறார்கள். பீகாரின் ஹாட் பேச்சுலர்கள் இவர்கள்தானாம்.
மிஸ்டர், லாலு பிரசாத் யாதவ், பசங்களுக்கு, காலா காலத்துல ஒரு கால்கட்ட போட்டு விடுங்க.