பீகாரில் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்: முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி, பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பீகாரில் 38 பேர் பலியாகியுள்ளனர், 133 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர், 69 பேர் காயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பீகாரில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நேபாளில் இன்று மதியம் 12.39 மணி அளவில் ஆப்டர்ஷாக் என்னும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இதையடுத்து டெல்லி, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும் இன்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவி செய்ய இந்தியா தவிர சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.