ஏழையாய் பிரிந்து சென்றார்; தொழிலதிபராய் திரும்பி வந்தார் - ஆச்சரியப்படுத்தும் “அயூப் அன்சாரி”
நவாதா: பீகாரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களின் புனித நாளான ரம்ஜான் அன்று குடும்பத்தை விட்டு பிரிந்தவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெரும் தொழிலதிபராக திரும்பி வந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் நவாதா மாவட்டம், பரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் அயூப் அன்சாரி.
இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தன் 28 ஆவது வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ரம்ஜான் தினத்தன்று காணாமல் போன அயூபை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
காலப்போக்கில் அவரது நினைவுடன், குடும்பத்தினர் வாழ்ந்தனர். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 28 ஆம் தேதி திடீரென தங்கள் முன் பெரும் தொழிலதிபராக அயூப் வந்து நின்றதைக் கண்டு அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தன்னுடைய உயர்வு குறித்து அயூப், "மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் எப்படியும் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நினைவு வரும்போது பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தபின் தான் அவர்களை சந்திக்க வேண்டும் என்று என்னை கட்டுப்படுத்திக் கொள்வேன்.
துவக்கத்தில் வாகனங்களுக்கான இருக்கைகள் தயாரிக்கும் கடையில் பணிக்கு சேர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொழிலை கற்றுக்கொண்டேன். எனக்கு கிடைத்த சம்பளத்தில் சிறுக சிறுக சேர்த்து தனியாக ஒரு நிறுவனத்தை துவக்கி இன்று பெரிய பணக்காரனாகி விட்டேன். ஆனால், அதற்குள் 32 ஆண்டுகாலம் ஓடி விட்டது. பின் என்னுடைய குடும்பத்தினரை பல இடங்களில் தேடி இறுதியில் ரேபரேலியில் கண்டுபிடித்தேன். ஆனால், என் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியை அளிக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.