மக்கள் ஜனாதிபதிக்கு புகழஞ்சலி... வேளாண் கல்லூரிக்கு கலாம் பெயரை சூட்ட பீகார் அரசு முடிவு
பாட்னா: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை, பீகாரில் உள்ள கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல்கலாம் நேற்று ஷில்லாங்கில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு தலைவர்கள் மற்றும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகாரில் இயங்கி வரும் கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு மறைந்த அப்துல் கலாமின் பெயரை வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி செல்லுமுன் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கலாம் எப்பொழுதுமே பீகாரின், குறிப்பாக கிராமப்புறங்களின் வளர்ச்சி குறித்து அக்கறை காண்பித்து வந்தார். பீகார் மாநிலம் கலாமுக்கு எப்போதுமே நெருக்கமானது. பீகாரும், பீகார் மாநில மக்களும் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
எனவே, கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், கலாமின் மறைவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பீகார் மாநிலத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.