பெண்களுக்கு புத்தாண்டு பரிசாக ஜீன்ஸ், செல்போனுக்கு தடை விதித்த பீகார் பஞ்சாயத்து
பாட்னா: பீகாரில் உள்ள கிராம பஞ்சாயத்து ஒன்று பெண்கள் ஜீன்ஸ் அணிய செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் ஹதுவா பிளாக்கில் உள்ள சிங்கா பஞ்சாயத்து கூடி கலந்தாலோசித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பெண்கள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த பஞ்சாயத்தினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து பஞ்சாயத்து முக்கிய தலைவர் கிருஷ்ணா சவுத்ரி கூறுகையில்,
பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், செல்போன் பயன்படுத்தினால் தவறான வழியில் செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த தடை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெண்களுக்கு ஜீன்ஸ், செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று இப்பகுதி பெற்றோரை நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளோம்.
தடையை அமல்படுத்த நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. யாராவது தடையை மீறினால் அபராதம் விதிக்கவோ, தண்டனை வழங்கவோ மாட்டோம் என்றார்.