பீகாரில் பிளஸ் 2 தேர்வு முறைகேடு.. ஸ்டேட் ரேங்க் வாங்கிய மாணவி மறுதேர்வுக்கு பிறகு கைது
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வில் மோசடி செய்து முதலிடம் பெற்ற மாணவி ரூபி ராய் மறுதேர்வில் தேர்ச்சி பெறாததை அடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்தனர்.
பீகாரில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஆர்ட்ஸ் பாடப்பிரிவில், 500-க்கு 444 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியாக அறிவிக்கப்பட்டவர் ரூபி ராய் (19). ஆனால், உள்ளூர் தொலைக்காட்சி பேட்டியில் ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்' என்பதை ‘புரோடிகல் சயின்ஸ்' என உச்சரித்ததும், அரசியல் அறிவியல் என்றால் சமையலை பற்றியது என கூறி தொலைக்காட்சி சேனல்காரர்களை அதிர வைத்ததார்.
ரூபி ராய் அரசியல் அறிவியல் பாடத்தை படித்து தேர்வு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது தேர்ச்சி குறித்த சந்தேகம் எழுந்தது. இவரைப் போல, கலை மற்றும் அறிவியல் பிரிவில், 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதியின்றி, முதலிடம் பிடித்ததாக எழுந்த புகாரை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.
மற்ற 13 மாணவர்களும் மறுதேர்வுக்கு ஆஜராகி, முந்தைய தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரூபி ராய் மட்டும் மறுதேர்வுக்கு வராமல் இருந்தார். கடந்த, 3 மற்றும் 17-ம் தேதி என இரு முறை அவருக்கு வாய்ப்பு அளித்தும், பல்வேறு காரணங்களைக் கூறி, மறுதேர்வுக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று பாட்னாவில் கல்வித் துறையின் சிறப்பு குழு முன்பாக ரூபி ராய்க்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.
உடனடியாக அவரது விடைதாள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் பிறகு ரூபி ராய் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பீகாரில் மாநில பள்ளி தேர்வு வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த தேர்வு முறைகேடு பற்றி விசாரணை மேற்கொண்டுவரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ரூபி ராய்யை கைது செய்தனர்.
ரூபி ராய் உள்பட, முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு மாணவர்களுக்கு எதிராக, பாட்னா சிவில் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.. இவ்வழக்கில் வைசாலி மாவட்டத்தில் உள்ள வி.ஆர் கல்லூரி முதல்வர் பச்சா ராய் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, பாட்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநில தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவி மற்றும் ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ உஷா சின்ஹா உள்பட 20 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.