பீகார் : இளம்பெண்ணை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் அடித்துக் கொலை
கயா: பீகாரில் இளம்பெண் ஒருவரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இளைஞரை, அப்பெண்ணின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் கயாவிற்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில், தாகூர் என்ற இளைஞர் ஒருவர் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டர்கள் இளம்பெண் ஒருவரை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப் பட்டிருந்தது.
இது தொடர்பாக தகவலறிந்த சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்களான தீபக் மற்றும் விக்கி என்ற இருவர், தாகூரைத் தேடிச் சென்று தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தாகூர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாக்குதலை தடுக்க முற்பட்ட தாகூரின் நண்பர்கள் இருவருக்கும் அடி விழுந்துள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தீபக் மற்றும் விக்கி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி அமர்தீப் குமார் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் எதற்காக, அப்பெண்ணை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டினார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.