"மெட்ராஸ்" உயர்நீதிமன்றம் இனி "சென்னை" உயர்நீதிமன்றமாகிறது!
டெல்லி: மெட்ராஸ் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பெயர்கள் விரைவில் மாற்றப்பட்டு அந்தந்த நகரங்களின் பெயரிலேயே அழைப்பதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் காலத்தில் இந்திய உயர்நீதிமன்றங்களின் சட்டம் 1861-ன் கீழ் அப்போதைய கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாய் நகரங்களில் உயர்நீதிமன்றங்களை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் அந்தந்த நகரங்களின் பெயர்களிலேயே உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. மகாராஷ்டிரா தலைநகர் பம்பாயில், ‘பம்பாய் உயர்நீதிமன்ற' 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி திறக்கப்பட்டது.
தற்போது இந்த ஐகோர்ட்டுக்கு நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய 3 கிளைகள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக தமிழக தலைநகரான அந்நாளைய மெட்ராசில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. இதன் ஒரே கிளையாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இயங்கி வருகிறது.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தமிழில் சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட்ட போதிலும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரே உள்ளது. முன்னதாக கல்கத்தாவில் 1862-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில அரசு பம்பாய் நகரின் பெயரை ‘மும்பை' என மாற்றியது. இதைப்போல தமிழகத்திலும் மெட்ராஸ் என்ற பெயர், ‘சென்னை' என மாற்றப்பட்டது. ஆனால் இந்த மாநிலங்களில் பழைய பெயரிலேயே இயங்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில், இந்த உயர்நீதிமன்றங்களும் அடங்கும்.
எனவே இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களையும், தற்போதைய நகர பெயரிலேயே மாற்ற வேண்டும் என அந்தந்த மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
அதன்படி இந்த உயர்நீதிமன்றங்களின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிப்பு நடவடிக்கைகளில் சட்ட அமைச்சகம் தற்போது ஈடுபட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரை அடைகிறது.
இதற்கிடையே கல்கத்தா உயர்நீதிமன்றத்தையும் தற்போது உள்ளபடி ‘கொல்கத்தா உயர்நீதிமன்றம்' என மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.