அதிக தொகுதிகளை வென்றும், கோவாவை போல மணிப்பூரையும் இழந்த காங்.! பெரும்பான்மையை நிரூபித்தது பாஜக அரசு
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறிய நிலையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றது.
இம்பால்: மணிப்பூர் சட்டசபையில் இன்று பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றிக்கொண்டது.
மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால், பாஜகவின் பலம் 33 ஆக அதிகரித்தது.
பாஜகவின், பிரேன் சிங் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பலத்தை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கூவத்தூர் பாணி
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தங்களது 28 உறுப்பினர்களை இம்பாலில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்தனர். இதேபோல் பாஜக தங்களது கட்சியைச் சேர்ந்த 17 உறுப்பினர்களை கவுகாத்தியில் உள்ள உணவகத்தில் தங்க வைத்து ராஜ உபசாரம் செய்து வந்தது.
இரு கட்சிகளும் நம்பிக்கை
இரு கட்சிகளுமே தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும் வகையில், பாஜகவின் யமுனம் கேம்சந்த் சிங் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
33 உறுப்பினர்கள்
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, 33 உறுப்பினர்கள் ஆதரவு கரம் உயர்த்தியதை தொடர்ந்து, பாஜக அரசு தப்பியது. 28 உறுப்பினர்களை பெற்றிருந்தாலும் காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
கோவாவிலும் அதே கதி
கோவா மாநில தேர்தலிலும் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வென்றிருந்தபோதிலும், பிற எம்எல்ஏக்கள் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ் சுணங்கிவிட்டது. இதையடுத்து, பாஜகவை முதலில் ஆட்சியமைக்க கோவா ஆளுநர் அழைத்த நிலையில் அந்த அரசும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று காட்டியது. கைக்கு வந்தது வாய்க்கு கிடைக்காத நிலையில் காங்கிரஸ் இரு மாநிலங்களிலுமே புலம்பி வருகிறது.