ஆள் கடத்தல் கும்பல் என்று நினைத்து பெங்களூர் போலீசாரை கைது செய்த சென்னை போலீஸ்!
பெங்களூர்: கடத்தல்காரர்கள் என நினைத்து பெங்களூர் போலீஸ் ஏ.சி.பிஐ சென்னை போலீசார் கைது செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பெங்களூரிலுள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்தன. இதில் அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவிகள் சிலர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் அல்-உம்மா தீவிரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாக, கர்நாடக காவல்துறை சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக, சென்னை, கோவைக்கு அவ்வப்போது கர்நாடக காவல்துறை சென்று விசாரணை நடத்தியுள்ளது.
அதேபோல, சம்பவத்தன்று சென்னை சென்ற கர்நாடக குற்றப்பிரிவு போலீஸ் படை, குண்டு வெடிப்பு சம்மந்தமாக குற்றவாளி இருவரை ரகசியமாக கைது செய்தது.
அந்த குற்றவாளியை பெங்களூர் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட போலீசார், வாகனத்தில் பெங்களூர் நோக்கி திரும்பினர். அதற்குள்ளாக கைதான நபர்களின் குடும்பத்தார், யாரோ அவர்களை கடத்தி செல்வதாக நினைத்து குழம்பி சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெங்களூர் போலீசார் சென்ற வாகனத்தை இடைமறித்த சென்னை போலீசார், அந்த குழுவில் இருந்த உதவி கமிஷனரிடமிருந்து (ஏசிபி) ரிவால்வர் மற்றும் செல்போனை சென்னை போலீசார் பறித்துக்கொண்டதோடு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த திடீர் கைது நடவடிக்கை பெங்களூர் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே, தகவல் அறிந்த பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.ஹரிசேகரன், சென்னை போலீசாரை தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்துக்கூறியுள்ளார். ஹரிசேகரன் இயல்பில் தமிழர் என்பதால் கருத்து பரிமாற்றம் எளிதாக இருந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஏசிபியை சென்னை போலீசார் விடுவித்துள்ளனர். பெங்களூர் போலீசார் மஃப்டியில் இருந்ததால் அவர்கள் போலீசார் என கூறியதை சென்னை காவல்துறையினர் நம்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் குழப்பபத்திற்கு காரணமாம்.