டெல்லியில் போலி வாக்காளர்களை திணிக்க பாஜக முயற்சி: கெஜ்ரிவால் புகார்
டெல்லி: டெல்லி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை திணிக்க பாரதீய ஜனதா முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக நாளை தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்தது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். சுமார் ஒன்றரை மாத கால ஆட்சிக்குப் பின் சிலப்பல காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப் பட்டது. விரைவில் அங்கு சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தவறான முடிவு...
இதற்கிடையே தாங்கள் ஆட்சியைக் கலைத்தது எவ்வளவு தவறானது எனக் காலந்தாழ்த்தி உணர்ந்தது ஆம் ஆத்மி. எனவே மீண்டும் அங்கு ஆட்சி அமைக்க அக்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர் வெற்றிகள்...
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது பாஜக. எனவே, மக்களிடம் பாஜகவிற்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி டெல்லியில் உடனடியாக சட்டசபைத் தேர்தலை நடத்தி, வெற்றி பெற அக்கட்சித் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி வாக்காளர்கள்...
எனவே, டெல்லி சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அங்கு போலி வாக்காளர்களைச் சேர்க்க பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘டெல்லி பாஜக உயர்மட்ட தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒவ்வஒரு தொகுதியிலும் குறைந்தது 5ஆயிரம் போலி வாக்காளர்களை இணைக்க வேண்டும் என மேலிடம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பாஜகவின் சதி...
ஒரு போலி வாக்குக்கு ரூ. 1,500 அளிப்பதாகவும், அதேபோல் ஒரு ஆம் ஆத்மிக்கு ஆதரவான வாக்கை நீக்குவதற்கு ரூ 200 அளிப்பதாகவும் அங்கு பாஜக உறுதி அளித்துள்ளது. பாஜகவுக்காக கடந்த வாரம் இந்த வேலையை செய்த சிலர் மேற்கண்ட தகவலை தெரிவித்தனர் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கமிஷனில் புகார்...
மேலும், இதுபற்றிய முறையான புகரை அளிக்க தேர்தல் அதிகாரிகளை நளை காலை 11 மணிக்கு ஆம் ஆத்மி சந்திக்க உள்ளதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.