கர்நாடக அரசை நெருக்கும் பாஜக... ரூபாவிற்கு ஆதரவாக போராட்டம்!
கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா இடமாற்றத்தை கண்டித்து பாஜக எம்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு : சசிகலாவிற்கு சிறையில் அளிக்கப்பட்ட சலுகைகளை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெற்ற விதிமீறலை அம்பலப்படுத்தினார் டி.ஐ.ஜி ரூபா. டிஜிபி சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சசிகலாவிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டை முன்வைத்த சில நாட்களிலேயே டிஐஜி ரூபா சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு கர்நாடக பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.