தமிழகம், கேரளாவில் தொய்ந்து கிடக்கும் பாஜகவை தூக்கி நிறுத்த... அமீத் ஷா 2 நாள் டூர்!
திருவனந்தபுரம்: தென் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியாக இன்று முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பாஜக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உச்சத்தில் உள்ள போதிலும் தென் மாநிலங்களில் அதன் தேர்தல் செயல்பாடு தலைமைக்கு திருப்தியளிக்கவில்லை. புதிதாக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா பிராந்திய வேறுபாடுகளை களைந்து பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். இதை பாஜக தலைவர்கள் கூட்டத்திலும் அவர் பிரகடனப்படுத்தினார்.
தெற்கே தேய்ந்துள்ளது
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தெற்கு மண்டலத்திலத்தில் அடங்கிய 132 நாடாளுமன்ற தொகுதிகளில், பாஜகவால் 22 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
சட்டசபை தேர்தல்கள்
தமிழகத்திலும், கேரளத்திலும் 2016ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. எனவே, அந்த தேர்தலில் பாஜகவை வலுவாக வேரூன்ற செய்யும் முயற்சியை அமித்ஷா தொடங்க உள்ளார்.
பாலக்காட்டு சேட்டன்களுடன் ஆலோசனை
இன்று மாலை கேரளாவின் பாலக்காடு நகருக்கு வரும் அமித்ஷா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் அதற்கடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். சனிக்கிழமை கொச்சி செல்லும் அமித்ஷா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளார்.
தமிழகம், கேரளத்தில் பாஜகவுக்கு வளர்ச்சி
நாடாளுமன்ற தேர்தலின்போது கேரளாவில் ஒரு இடத்தையும் பாஜக கைப்பற்றவில்லை என்ற போதிலும், அதன் வாக்கு விகிதம் 10.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரம் தமிழகத்திலும் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியை பாஜக வெற்றி பெற்றுள்ளது.
நாளை தமிழகம் வருகை
2016ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் இவ்விரு மாநிலங்களிலும் நடைபெற உள்ளதால் இப்போதிருந்தே ஆயத்த பணிகளை துவக்க, கட்சியினருக்கு அமித்ஷா கட்டளையிடுவார் என்று தெரிகிறது. அமித்ஷா தமிழகத்துக்கு நாளை சனிக்கிழமை வருகிறார். மறைமலைநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். அவரது வருகை பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.