இறுதி முடிவெடுங்க ரஜினி ஜி!... அழுத்தம் கொடுக்கும் பாஜக
தமிழக பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்த் பாஜகவுடன் கை கோர்க்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி : நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் நடக்குமா? நடக்காதா? என்று 20 ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி, அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம் என்றும், போர் வரும் வரை பொறுமை காக்குமாறு தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம் என ரஜினியின் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரஜினிக்கு எப்போதும் கதவு திறந்தே இருக்கும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
அமைச்சர்கள் விருப்பம்
மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என கூறிவருகின்றனர். மேலும் ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் அவருக்கு ஏற்ற பொறுப்பு வழங்கப்படும் என்று சூசகமாகவும் தெரிவித்தனர்.
இறுதி முடிவு
இந்த நிலையில், தமிழக பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்த் தங்களுடன் கரம் கோர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நல்லாட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க ரஜினிகாந்த் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு ரஜினி தேவை
தமிழகத்தில் பாஜக வலுவிழந்துள்ள நிலையில் அதை வலுப்படுத்த ரஜினி போன்ற வலுவான ஆள் தேவை என்று அமித்ஷா கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் கொள்கைகளை தமிழக மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க ரஜினிகாந்த் போன்ற ஒரு பிரபலம் தேவைப்படுவதாக கூறினார்.
அழுத்தம் தரும் பாஜக
கடந்த 2 வாரங்களாக ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து பல்வேறு பரபரப்புகள் கிளம்பும் நிலையில், அவருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா இன்று இரண்டாவது முறையாக அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக் கிழமை ரஜினி பாஜகவிற்கு வந்தால் அவருக்காக கதவு திறந்தே இருக்கும் என்ற நிலையில் இன்று மீண்டும் ஓபனாக அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.