பாஜக புதிய பொறுப்பாளர்கள்… கேரளா பொறுப்பாளர் ஆனார் ஹெச்.ராஜா
டெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், கட்சியின் துணை அமைப்புகளுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார். கேரளா மாநில பொறுப்பாளராக தமிழகத்தின் ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய அளவிலான "உறுப்பினர் தொடர்பு மகா இயக்கம்' இரு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் மாநிலங்களுக்குப் பொறுப்பாளர்களையும், துணை பொறுப்பாளர்களையும், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது
இது தொடர்பாக பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் மேலிடப் பொறுப்பாளராக முரளிதர் ராவ், துணைப் பொறுப்பாளராக சி.டி. ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் மேலிடப் பொறுப்பாளராக ஷியாம் ஜஜு, துணைப் பொறுப்பாளராக தருண் சுக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரள பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி பொறுப்பாளராக மகேஷ் கிரி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி - முரளிதர் ராவ்; மகிளா மோர்ச்சா - புரந்தேஸ்வரி தேவி; எஸ்சி மோர்ச்சா - பூபேந்திர யாதவ் (எம்.பி.); எஸ்டி மோர்ச்சா - ராம்விசார் நேதம்; சிறுபான்மைப் பிரிவு - ஃபாரூக் கான்; கிசான் மோர்ச்சா - சத்யபால் மாலிக், நித்யானந்த் (இணை பொறுப்பு); இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு - சுதா யாதவ்; கிசான் மோர்ச்சா தலைவர் - விஜய் பால் சிங் தோமர்; இதர பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சா தலைவர் எஸ்.பி. சிங் பகேல்.