டெல்லி தேர்தல்.. வாக்கு மெஷினில் குளறுபடி செய்துவிட்டது பாஜக.. அடம் பிடிக்கும் அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி மாநகராட்சி தேர்தலில்,பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கக் காரணம் ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி செய்ததுதான் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி செய்துள்ள காரணத்தால் தான் பாஜக முன்னிலையில் உள்ளது என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில், வடக்கு, தெற்கு,கிழக்கு மண்டல மாநகராட்சிகளுக்கு கடந்த 22ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று காலை முதல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், பாஜக வாக்கு எண்ணிக்கையில் 180 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.
பாஜக முன்னிலை வகிப்பதற்குக் காரணம், ஓட்டு இயந்திரங்களில் குளறுபடிகளைச் செய்ததுதான் என டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தல் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றபோது, காங்கிரஸ்,பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஓட்டு இயந்திரத்தில் செய்த கோளாறு காரணமாகவே பாஜக வெற்றியடைந்தது என ராஜ்யசபாவில் அமளியை உண்டாக்கினர்.
அதையடுத்து, தேர்தல் கமிஷனில் பழைய வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என காங்கிரஸ்,பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மனு அளித்தன.
இந்நிலையில்,பாஜகவின் டெல்லி மாநகராட்சி வெற்றியும் ஓட்டு இயந்திர கோளாறால் உண்டாக்கப்பட்ட வெற்றி என்று அர்விந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். ஆனால்,இதற்கு பாஜக எந்த பதிலும் கருத்தும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.