காஷ்மீரில் ஆட்சி அமைக்க அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிப்போம்: பா.ஜ.க.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 81 இடங்களளக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 42 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகளும், ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 தொகுதிகளும் கிடைத்தன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றினர்.
பெரும்பான்மைக்கு தேவையான 44 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைவதில் இழுபறியும், சிக்கலும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.
இக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான அருண்ஜேட்லி, அருண்சிங் ஆகிய இருவரையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பார்வையாளர்களாக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜம்மு காஷ்மீர் சென்று ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்தை கேட்டு அறிவார்கள்.
இதேபோல் ஜார்க்கண்ட் மாநில பார்வையாளர்களாக பா.ஜ.க.வின் ஜே.பி.நத்தா மற்றும் வினய் சகஸ்திரபுத்தே இருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆட்சிமன்ற குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் ஜே.பி. நத்தா கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள். எனவே ஆட்சி அமைக்க அனைத்து விதமான வாய்ப்புகளும் எங்களுக்காக திறந்தே இருக்கின்றன. அந்த அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலிப்போம் என்றார்.
இந்த நிலையில், காஷ்மீர் முதல்வர் பதவியை ஒமர் அப்துல்லா நேற்று ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை அவர் மாநில ஆளுநர் என்.என். ஓராவிடம் சமர்ப்பித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் பொறுப்பு மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க,வுக்கு இருக்கிறது. ஆட்சி அமைப்பது பற்றி நாங்கள் எந்த கட்சியுடனும் விவாதிக்கவில்லை என்றார்.
தற்போதைய நிலையில் 28 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி கூட்டணி சேர்ந்தால் பா.ஜ.கவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம். சிறந்த நிர்வாகத்தை அளிப்பதற்காக எங்கள் கட்சி ஆட்சி அமைக்க சிறிது அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று நேற்று முன்தினம் மெஹ்பூபா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.