பெங்களூருவில் நாளை தொடங்குகிறது பாஜக தேசிய செயற்குழு! தமிழகத்தில் காலூன்ற 'கேம் பிளான்'
டெல்லி: பெங்களூருவில் நாளை தொடங்க உள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜகவை வளர்ப்பது குறித்து 'கேம் பிளான்' வகுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு முதல் முறையாக பெங்களூருவில் நாளை செயற்குழு கூடுகிறது. இதில் பாஜக செயற்குழுவின் 111 உறுப்பினர்களை தவிர, சிறப்பு அழைப்பாளர்களாக,
பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
மோடி, அத்வானி
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்றோரும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் முக்கியம் அமைச்சரே
இதுகுறித்து, பாஜக பொதுச்செயலாளர் பி.முரளிதர் ராவ் கூறுகையில், "அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய செயற்குழுவில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டு, செயல் திட்டம் வகுக்கப்படும்" என்றார்.
நம்பர்-1
இந்த மாநிலங்களில் எல்லாம், பாஜகவை நம்பர்-1 மாநிலமாக மாற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர், நிர்வாகிகள்.
முதலில் இவர், நிறைவில் அவர்
செயற்குழுவின் முதல் நாள் கூட்டம், அமித்ஷா உரையுடன் தொடங்க உள்ளது. நிறைவு நாளில், பிரதமர் மோடி, அத்வானி போன்றோர் உரையாற்றுகின்றனர்.