ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: மோடி அலை ஒர்க் அவுட் ஆகுமா?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அமோக வெற்றி பெற பாஜக நினைப்பதால் அம்மாநில சட்டசபை தேர்தல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே சமயம் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் என்னாகும் என்று வியக்கலாம். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி பற்றி தேர்தல் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் சந்தீப் சாஸ்த்ரி ஒன் இந்தியாவுக்கு பிரத்யேகமாக மூன்று பாகங்களில் தனது கருத்தை அளித்துள்ளார்.
முதல் பாகத்தில் அவர் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பற்றி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர்
மக்கள் மாநில அரசின் செயல்பாட்டை பொருத்து வாக்களித்து வருவதை கடந்த ஓராண்டாக பார்க்க முடிகிறது. ஜம்மு காஷ்மீரில் ஆளும் கட்சி பெரிய சாதனைகளை படைத்துவிடவில்லை. உமர் அப்துல்லாவிடம் மக்கள் நிறைய எதிர்பார்த்தார்கள். ஆனால் மாதங்கள் செல்ல செல்ல அவர் மீதான அதிருப்தி தான் அதிகரித்து வருகிறது.
நம்பிக்கை இல்லாமை
உமர் அப்துல்லா நம்பிக்கையில்லாதது போன்று காணப்படுகிறார். அவர் தனது தொகுதியை மாற்றினார், மேலும் கட்சியினர் விலகிச் சென்றுள்ளனர். அவரது தந்தையின் புகழும் இந்த முறை செல்லுபடியாகவில்லை. உமர் முன்பு இருக்கும் மலை போன்ற பணிகளை பார்த்தால் அவர்பாடு கஷ்டம் தான்.
பாஜக
உமர் அப்துல்லாவின் பிரச்சனைகளால் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவு காஷ்மீரின் குறிப்பிட்ட இடங்களிலேயே உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற வாய்ப்பை தேடுகிறது. ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் இந்த தேர்தலில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும் என்பதையும், அது அரசு அமைக்க முக்கியம் என்பதையும் மறுக்க முடியாது.
விளைவுகள்
இந்த தேர்தலில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் மோடி பல திட்டங்களை அறிவித்தது அவருக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் பாஜகவால் தனியாக அரசு அமைக்க முடியாது. இருப்பினும் ஜம்மு பகுதியில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும்.
காங்கிரஸ்
லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்தே இன்னும் காங்கிரஸ் மீண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் தோல்வி அடைந்து வருகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி முன்பு காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டி இருந்தது. ஆனால் நான் ஏற்கனவே கூறியது போன்று காங்கிரஸ் லோக்சபா தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ளது. அதனால் இம்முறை ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜகவுக்கு முக்கிய பங்கு இருக்கும்.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலமும் ஜம்மு காஷ்மீரோடு சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகளும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.
சாஸ்திரி ஜார்க்கண்ட் தேர்தல் பற்றி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் களம்
ஜார்க்கண்ட் முக்திமோர்சா கட்சியின் மோசமான ஆட்சி தான் முக்கிய பிரச்சனை. இந்த தேர்தலில் அக்கட்சி மோசமான ஆட்சியின் விளைவுகளை அனுபவிக்கும். ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் மோசமான அரசை குறைகூறி காங்கிரஸால் வாக்கு கேட்க முடியாது. காரணம் ஒரு காலத்தில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவுடன் கை கோர்த்திருந்தது.
மோடி அலை
ஜார்க்கண்டிலும் மோடி அலை வேலை செய்யும் என்று நினைக்கிறேன். லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஒன்று சேர்வது பாஜகவுக்கு நல்லது தான் என்கிறார்கள் பலர். பிரதமர் தலைமையில் தான் பாஜக இந்த தேர்தல் களத்தை சந்திக்க உள்ளது. இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது ஜார்க்கண்ட் தேர்தலில் தெரிய வரும்.
பெரிய பரீட்சை
ஜார்க்கண்ட் தேர்தல் பிரதமரின் தலைமையிலான பாஜகவுக்கு மிகப்பெரிய பரீட்சை ஆகும். கடந்த காலத்தில் எங்களுக்கு வாய்ப்பளிக்கவே இல்லை என்று மகாராஷ்டிரா, ஹரியானாவில் கூறியது போல் பாஜகவால் ஜார்க்கண்டில் கூற முடியாது. ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த தேர்தல் மிகப்பெரிய பலப்பரீட்சை என்றேன். ஜார்க்கண்டில் காங்கிரஸ் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பலரும் கவனிப்பார்கள். மாநிலத்தில் காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம்.