முதல் முறையாக.. ராஜ்யசாவில் தனிப்பெரும் கட்சியானது பாஜக.. 2வது இடத்தில் காங்.!
இந்தியாவில் முதன் முறையாக ராஜ்ய சபாவில் பாஜக 58 எம்பிக்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து இதுவரை முதல் இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி: லோக் சபா அதிக எம்பிக்களை கொண்டுள்ள பாஜக ராஜ்ய சபாவில் ஆதரவு கட்சிகளின் துணையுடனேயே மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், முதன் முறையாக ராஜ்ய சபாவில் 58 எம்பிக்களை பாஜக பெற்றுள்ளது.
கடந்த 65 ஆண்டுகளாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும் கட்சியாக இருந்து வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து சம்பத்தியா உக்கே பாஜக சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் ராஜ்யசபாவில் பாஜவின் பலம் 58ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் இருவர் அண்மையில் மரணம் அடைந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 57 ஆக குறைந்தது. இதனால் சம்பத்தியா உக்கே எம்பியானதும், பாஜகவின் பலம் 58 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி 2ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
வரும் 8ம் தேதி ராஜ்ய சபாவின் 9 சீட்டுகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 இடங்களில் மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 3 இடங்களில் குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் குஜராத் மாநிலத்தில் இருந்து அமித்ஷாவும், ஸ்மிருதி இரானியும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், ராஜ்ய சபாவில் பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும்.