மகாராஷ்டிரா தேர்தல் ரேஸில் சிவசேனாவை முந்திய பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவை பின்னுக்கு தள்ளி பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பிற கட்சிகளை விட பாஜக தான் அதிக இடங்களில் அதாவது இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவை அடுத்ததாக சிவசேனா 47 இடங்களை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தெற்கு கராத் பகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜ் தாக்கரேவின் நவநிர்மன் சேனாவுக்கு இதுவரை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. மேலும் அக்கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
தேர்தல் பிரச்சார மேடைதோறும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸின் ஊழல்களை பட்டியலிட்டே பாஜக வாக்கு சேகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.