'மண்ணின் மைந்தர்' ரஜினிகாந்துக்கு பாரத ரத்னா விருது... மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக கோரிக்கை
மும்பை: மகாராஷ்டிராவின் மண்ணின் மைந்தர் என்பதால் நடிகர் ரஜினிகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில சட்டசபையில் இன்று பேசிய பாஜக எம்.எல்.ஏ. அனில் கோட்டே வலியுறுத்தியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30 ஆண்டுகாலமாக அரசியல் அரங்கத்தில் புதிராக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவார் வருவார் என நம்பிய ரசிகர்கள் இன்று பேரன் பேத்திகளையே எடுத்துவிட்டனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு புது படத்தின் போதும் பூடகமாக தாம் அரசியலுக்கு வருவதாக கூறுவார் ரஜினிகாந்த். பின்னர் அவரும் கண்டுகொள்ளமாட்டார்... ரசிகர்களும் ஏமாறுவதை வாடிக்கையாக வைத்திருப்பர்.
மாபெரும் வெற்றி
இந்த நிலையில் தற்போது ரஜினியின் கபாலி திரைப்படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது. படம் வெளியான 3-வது நாளிலேயே மிகப் பெரிய வெற்றி அடைந்துவிட்டதாக ரஜினிகாந்தே அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ
இதனிடையே மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. அனில் கோட்டே ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அனில் கோட்டே பேசியதாவது:
மண்ணின் மைந்தர்
மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். அவர் இந்த மண்ணின் மைந்தர்.
பாரத ரத்னா விருது
மகாராஷ்டிரா மண்ணின் மைந்தர் என்பதால் ரஜினிகாந்துக்கு மகாராஷ்டிரா பூஷண் விருதை முதலில் வழங்க வேண்டும். அத்துடன் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து சட்டசபையில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அனில் கோட்டே பேசினார்.