ராஜ்யசபா எம்.பி.யாகிறார் இல. கணேசன்.... மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு?
டெல்லி: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான இல. கணேசன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த இடம் காலியாக உள்ளது. காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடத்துக்கு இல.கணேசனை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுநேர ஊழியர்.
1990களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து பாஜகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் இல. கணேசன். புதுவையில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ராஜ்யசபா எம்.பி. இடம் காலியான போதே அந்த இடத்துக்கு இல. கணேசன் பெயர் அடிபட்டது.
தமிழகத்தில் பாஜகவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் எம்.பி. மட்டும் இருக்கிறார். அவர் மத்திய இணை அமைச்சராக உள்ளார்.
தற்போது இல. கணேசன் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.