டெய்லி 5 கேள்வி கேப்போம்.. கெஜ்ரிவாலுக்கு பாஜக வைக்கும் "டெஸ்ட்"
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலை ஒட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடப் போவதில்லை என பாஜக அறிவித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 5-ஆம் தேதி வரை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தினசரி 5 கேள்விகளைக் கேட்க இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது. எனவே, இரண்டு கட்சிகளும் தங்களது முழுபலத்தையும் திரட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலும், பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கிரண்பேடியும், காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் ஒன்று சேர்ந்து போராடியவர்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இந்நிலையில், எப்படியும் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தே தீருவது என்ற முடிவுடன் பாஜக புதிய பிரச்சார திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதற்கு, கெஜ்ரிவாலிடம் 5 கேள்விகள் என பெயரிட்டுள்ளதாம் பாஜக.
இது தொடர்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜிவ் பிரதாப் ரூடி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஐந்து கேள்விகளை வெளியிட்டுள்ளனர். அவையாவன :
1. கடந்த 2013 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வின் ஆதரவை பெறமாட்டோம் என்ற உறுதிமொழியை மீறி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்தது ஏன்? அப்போது எங்கே போனது உங்கள் கொள்கைகள்?
2. ஆட்சிக்கு வந்தால் அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்?
3. ஒரு சாதாரண மனிதனாக இருக்க விருப்பம் தெரிவித்து, தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று பிரசாரத்தின் போது கூறிய கெஜ்ரிவால், உ.பி., மாநில போலீசாரிடமிருந்து இசட் பாதுகாப்பும், டில்லி போலீஸ் பாதுகாப்பையும் பெற்றது ஏன்?
4. அரசாங்க பயன்பாட்டிற்கு உயர்ரக கார்களை கெஜ்ரிவால் அரசாங்கத்தில் இருந்தவர்கள் கேட்டது ஏன்?
5. தனியார் விமான பயன்பாட்டை எதிர்த்த அரவிந்த் கெஜ்ரிவால், கட்சி நிதி திரட்டுவதற்காக தனியார் விமானங்களில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்தது ஏன்?
டெல்லி பிரசாரத்தின் போது இந்த 5 கேள்விகளையும் முன்வைத்து பாஜக பிரசாரம் செய்யவுள்ளதாக ரூடியும், நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளனர்.
இது தவிர டெல்லி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக 20 மத்திய அமைச்சர்களையும், நாடு முழுவதிலிமிருந்து 120 எம்.பி.க்களையும் களமிறக்கியுள்ளது.
‘ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக கவலையடைந்துள்ளதா? ஏன் கட்சியின் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்ட வேண்டும்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் அளித்த பாஜக தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி, "இது சாதாரண தேர்தல் நடைமுறைதான்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், டெல்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பின் தங்கியுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அதிருப்தி தெரிவித்திருப்பதாகவும், அதனாலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.