ராஜீவ் காந்தி ஜாதகத்தை ஏன் கேட்டாரு நேரு.. காங்கிரஸை கிண்டலடிக்கும் பாஜக
டெல்லி: ஜோதிடம் பார்ப்பதை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, அன்று ஜவஹர்லால் நேரு தனது பேரன் ராஜீவ் காந்திக்கு ஜாதகம் எழுதிக் கொடுக்குமாறு ஜோதிடர் ஒருவரைக் கேட்டுக் கொண்டாரே, அது ஏன் என்பதை விளக்குமா என்று பாஜக கேட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜோதிடர் கிருஷ்ணா ஹுத்சிங் என்பவருக்கு 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி நேரு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடித விவரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தனது பேரன் ராஜீவ் காந்தியின் சரியான ஜாதகத்தைக் கணித்துத் தயாரித்துத் தருமாறும், அதில் பேரன் பிறந்த நாள், மணி, நிமிடம் உள்ளிட்டவை சரியான முறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் என்றும் நேரு கூறியுள்ளார்.
அக்காலத்தில் ஜாதகம்தான் பிறப்புச் சான்றிதழ் போல என்பதால் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்றும் நேரு தனது கடிதத்தில் ஜோதிடருக்குக் கூறியிருந்தார்.
இதை தற்போது பாஜக கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஜோதிடர் ஒருவரைப் பார்த்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்குப் பதிலடியாக நேரு கடிதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த கடிதத்தை மூத்த அமைச்சர்களான வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வெளியிட்டு கூறுகையில், ஜோதிடம் பார்ப்பது தவறு என்று கூறும் காங்கிரஸ் கட்சி நேருவின் இந்தக் கடிதத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்று கேட்டனர்.