விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி... நிரூபித்துக் காட்டிய கேரளத்து ஓ.ராஜகோபால்
திருவனந்தபுரம்: கேரளாவிலும் புதிய வரலாறு படைத்துள்ள பாஜகவின் ஓ. ராஜகோபால், தொடர்ந்து 15 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்று 16வது முயற்சியில் வெற்றி பெற்று, கேரள சட்டசபையில் பாஜகவை முதல் முறையாக அழைத்துச் சென்றுள்ளார்.
பத்தாவது முறை கீழே விழுந்தவனை பூமி முத்தமிட்டுச் சொன்னது, ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ' என்ற தன்னம்பிக்கை வரிகளை நிஜமாக்கியுள்ளார் கேரள பாஜக எம்.எல்.ஏ. ராஜகோபால்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, கேரள மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர்.
சாதனை...
இந்த இலக்கை அடைய அவர் 15 தேர்தல்களில் தோற்க வேண்டியிருந்தது. இப்போது தனது 86வது வயதில் இந்த லட்சியத்தை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளார் ராஜகோபால்.
ஆச்சர்யம்...
மோடி அலை வீசியபோதும் கூட கேரளாவில் சாதிக்க முடியாமல் போன கட்சி பாஜக. ஆனால் தற்போது இடதுசாரிகளுக்கு ஆதரவான அலை வீசிய சமயத்தில் பாஜகவுக்கும் அங்கு வெற்றி கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
எல்லா தேர்தல்களிலும்...
இந்த வெற்றிக்குக் காரணமான ஓ.ராஜகோபால், பஞ்சாயத்துத் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை ஒன்று விடாமல் போட்டியிட்டவர். தோல்விதான் என்று தெரிந்தும் கூட தீவிரமாக களப் பணியாற்றியவர் ராஜகோபால்.
இலக்கு...
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ராஜகோபால் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஆபிரகாம் லிங்கன் கூட பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்தான். கடைசியில் அவர் அமெரிக்க அதிபரானார். எங்களிடம் இலக்கு இருந்தது. எனவே எங்களால் வெல்ல முடிந்தது" என்று அடக்கமாக கூறுகிறார்.
கட்சியின் கட்டளை...
மேலும், " இந்த முறை நான் போட்டியிடுவதா என்ற யோசனையில் இருந்தேன். ஆனால் கட்சி நான் போட்டியிட வேண்டும் என்று கட்டளையிட்டது. எனவேதான் வந்தேன்" என்கிறார்.
சசிதரூருக்கு போட்டியாக...
2014 லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டார் ராஜகோபால். அப்போது காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிட்டார். அவருக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார் ராஜகோபால். இறுதியில் தரூர் வென்றார்.
தனி ஒருவன்...
ராஜகோபால் ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இருப்பினும் சட்டசபைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார். தற்போது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு பெரும் பலங்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.
எதிர்பார்ப்பு...
கேரள சட்டசபையில் ராஜகோபாலின் செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதை பொறுத்தே கேரள மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி இருக்கும் என்பதால் ராஜகோபால் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.