"தில்" இருந்தா கருப்புப் பண முதலைகள் பெயரைச் சொல்லுங்க பார்ப்போம்.. ஜேட்லிக்கு காங். சவால்
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தைரியம் இருந்தால் பெயர்களை பாஜக அரசு வெளியிடட்டும் என்று காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
குறிப்பாக, கருப்புப் பண விவகாரத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கடுமையாக விமர்சித்து வந்த தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அது சவால் விட்டுள்ளது.
இதுகுரித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குழு தலைவர் அஜய் மேக்கான் கூறுகையில், நாங்கள் யாரையும் எந்தச் சூழலிலும் பிளாக்மெயில் செய்ய மாட்டோம், செய்தும் பழக்கம் இல்லை. தனி நபர்களைத் தாண்டிய கட்சி காங்கிரஸ்.
கருப்புப் பண விவகாரத்தில் யார் தொடர்பு கொண்டிருந்தாலும் கண்டிப்பாக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். அதேசமயம், பாதி உண்மை, பாதி தகவல்களை மட்டும் கசிய விடுவது என்பதை காங்கிரஸ் ஏற்காது.
முடிந்தால், தைரியம் இருந்தால் அனைத்துப் பெயர்களையும் அருண் ஜேட்லி வெளியிட வேண்டும். அதுதான் தர்மமும் கூட.
இந்த விஷயத்தில் பாஜக துணிச்சலாக, வெளிப்படையாக செயல்பட முன்வர வேண்டும். அதை்ததான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார் மேக்கான்.
மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸை யாரும் பிளாக் மெயில் செய்யவும் தேவையில்லை. உங்களிடம் என்ன பெயர் இருக்கிறதோ, அதை அப்படியே வெளியிடுங்கள். அதை வைத்து எங்களை பிளாக்மெயில் செய்யக் கூடாது.
மேலும் தங்களிடம் உள்ள 136 பெயர்களோடு அரசு நிற்கக் கூடாது. முழுமையான உண்மையை அது வெளிப்படுத்த வேண்டும். செலக்டிவ்வாக பெயர்களை வெளியிடக் கூடாது. அனைத்துப் பெயர்களையும் வெளியிடுங்கள் என்றும் மேக்கான் கூறினார்.