கருப்புப் பணம்: மக்களை ஏமாற்றிய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங். வலியுறுத்தல்!
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது.. இதற்காக நாட்டு மக்களிடத்தில் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 2வது நாளான நேற்று கருப்புப் பண விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி போர்க்கொடி எழுப்பின.
ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவோம் என்று தேர்தல் நேரத்தில் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 200 நாட்களாகியும் ஒரு துரும்பையும் ஏன் அசைக்கவில்லை.. மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதி கொடுத்தீர்களா? என்பதுதான் மோடி சர்க்கார் முன் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் முன்வைக்கிற கேள்வி.
இருப்பினும் நாடாளுமன்ற இரு சபைகளிலும் நேற்று அனுமதி மறுக்கப்பட ஒரே அமளிக்காடாகிப் போனது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கறுப்புப் பணம் குறித்து விவாதிக்க ஒருவழியாக இரு சபைகளிலும் அனுமதிக்கப்பட்டது.
லோக்சபாவில் கருப்புப் பணம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதற்காக மோடி அரசு மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கருப்புப் பணத்தை மீட்பது குறித்து எத்தனை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும். கருப்புப் பணத்தை வைத்திருப்போரின் 50 பெயர்கள் தம்மிடம் இருப்பதாக அரசு கூறுகிறது. ஏன் அவர்களது பெயர்களை இன்னமும் வெளியிடவில்லை.
வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியிருக்கும் அனைவரது பெயரை வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
கருப்பு பணம் தொடர்பான விவாதத்தில் ராஜ்யசபாவில் காங்கிரஸின் ஆனந்த் சர்மா பேசியதாவது:
கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரஸ் செயல்படவில்லை என்று முன்னர் பாஜக குற்றம்சாட்டியது. இப்போது நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?
கருப்புப் பணத்தை பதுக்குவதற்கு 40 முதல் 50 நாடுகள் வரை உதவியாக இருக்கின்றன. இதில் சுவிஸ் முதலிடம் வகிக்கிறது. சுவிஸில்தான் பெருமளவு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியோரின் வங்கி கணக்கு விவரங்களை அரசு பெற்று அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
மத்தியில் ஆட்சி மாறினால் கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் எதனையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.
இவ்வாறு ஆனந்த் சர்மா பேசினார்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் மோடி அரசை கடுமையாக விமர்சித்தனர்.