சாமானிய மக்களும் இனி பிஎம்டபிள்யூ காரில் பயணிக்கலாம்! ஓலா போட்டாச்சு ஒப்பந்தம்
டெல்லி: ஆடம்பரமான, பிஎம்டபிள்யூ காரில் செல்வது இனி கனவு கிடையாது. ஓலா ஆப் ஒன்று இருந்தாலே அது சாத்தியமாகப்போகிறது.
பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்கள் சொகுசாக சாலைகளில் பயணிப்பதை பார்க்கும்போது, ஒன்று நாம் அந்த காரை சொந்தமாக்க வேண்டும், அல்லது நமது சொந்தக்காரர்களில் யாராவது அதுபோன்ற காரை வைத்திருந்தால் பயணித்து அனுபவிக்கலாமே என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
இனிமேல் அப்படியெல்லாம் ஏங்க தேவையில்லை. ஓலா வாடகை கார் ஆப் மூலமே நாம் இந்த ஆசையை யார் வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும். ஆம்.. டெல்லியில் இன்று பிஎம்டபிள்யூ மற்றும் ஓலா நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன.
ஓலா ஆப் மூலம் காரை புக் செய்யும்போது, Lux பிரிவில் காரை தேர்ந்தெடுத்தால் பிஎம்டபிள்யூவில் பயணிக்க வாய்ப்பு ஏற்படும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.250. அதன்பிறகான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 முதல் ரூ.22 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் முதல்கட்டமாக இந்த சேவை கிடைக்க உள்ளது என அறிவித்த ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரணாய் ஜிவ்ராஜ்கா, படிப்படியாக சென்னை போன்ற பிற நகரங்களிலும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.