ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்கிறது சிபிஐ!
ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் சிபிஐ விசாரிக்க உள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் துணை குழுவிடம் சிபிஐ தெரிவித்துள்ளது.
1986-ம் ஆண்டு ஸ்வீடனில் இருந்து போபர்ஸ் பீரங்கிகளை ரூ1,437 கோடிக்கு கொள்முதல் செய்ததில் மிகப் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு மிக நெருக்கமான ஒட்டாவியோ குவாத்ரோச்சிதான் இடைத்தரகராக செயல்பட்டார் என்பதும் குற்றச்சாட்டு.
போபர்ஸ் பீரங்கிகளை கொள்முதல் செய்ய அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதும் புகார். நாட்டின் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது இந்த போபர்ஸ் பீரங்கி ஊழல். இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
குவாத்ரோச்சி
இந்தியாவில் தங்கியிருந்த குவாத்ரோச்சி 1993-ம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றார். அதன்பின்னர் அவர் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை.
இந்துஜா சகோதரர்கள்
இந்த வழக்கில் போபர்ஸ் நிறுவனம், தொழிலதிபர்கள் இந்துஜா சகோதரரகள் ஆகியோர் 2005-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் குவாத்ரோச்சி 2103-ல் காலமானார்.
நாடாளுமன்ற குழு
இவ்வழக்கில் சிபிஐ மேல்முறையீடு எதுவும் செய்யாமல் இருந்து வந்தது. இதனிடையே போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக 1989, 1990ஆம் ஆண்டுகளில் சிஏஜி அளித்த அறிக்கைகள் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவில் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன.
மீண்டும் விசாரணை
இந்த அறிக்கைகளை தற்போது நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு ஆராய்ந்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க முடியுமா? என சிபிஐயிடம் அக்குழு கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள சிபிஐ, போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக கூறியுள்ளது.